Friday, May 03, 2013

வெற்றிக்கு வழி – எனக்கு தோன்றிய கருத்துக்கள்

ஆசை மட்டுமே ஒருவனுக்கு எல்லாவற்றையும் பெற்றுத் தந்திட இயலாது. ஆசையுடன் முயற்சியும் காலமும் அமைந்துவரப் பெற்றால் அதைவிட பெரிய சக்தி வேறு ஏதுமில்லை.

ஆசை என்பது அளவிடக்கூடியதாகவும் எண்ணியபடி முடிப்பதற்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டுமேயன்றி வேறாயின் அதனால் பயனேதும் இல்லை. இதுவே சரியான திட்டமிடுதல் ஆகும்.

நான் இன்னொரு தாஜ்மகால் அமைப்பேன்” என்று எண்ணி காலத்தை விரயம் செய்வதைவிட “எனக்கென ஒரு சொந்த வீடு கட்டுவேன்” என்று நினைப்பது மேல். இந்த அவா அளவிடக்கூடியது. “நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சேர்த்தால் என்னால் பத்து வருடங்களுக்குள் இந்த ஆசையினை பூர்த்தி செய்து கொள்ள இயலும் என்று திட்டத்தை அளவிட இயலும்.

திட்டத்தின் அடுத்தபடி முயற்சி. முயற்சி என்பது ஏதோ தொடங்கி பின் வெறுப்படைந்து விட்டு விடுவதல்ல. முயற்சி – விடாமுயற்சியே ஒரு திட்டம் செயல்முறைக்கு வர மூல காரணம்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணிய

திண்ணிய ராகப் பெறின்.

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

என்பன வள்ளுவன் வாக்கு.

ஒரு செயல் திட்டத்தில் மிக முக்கிய அங்கமாக விளங்குவது இம்முயற்சியே. முயற்சி இல்லாத எந்த திட்டமும் ஆசையும் வெறும் கனவுதான்.

முயற்சிக்கு முக்கிய விரோதிகளாக நான்கு காரணிகளை வள்ளுவப் பெருமான் நமக்கு காட்டுகிறார்.

1. காலம் தாழ்த்தி செய்தல்

2. மறதி

3. சோம்பல்

4. தூக்கம்

(நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்)

இந்த நான்கிலிருந்து விடுபட்டவனுடைய முயற்சியே பலன் தரகூடியதாக அமையும்.

தடைகள் பல வந்தாலும் தளராத நெஞ்சுறுதி கொண்டவனே முன்னேறிச் சென்று முடிவில் வெற்றி நாயகனாகிறான்.

ஆசை --->  திட்டம் ---> (காலம் + முயற்சி) ---> வெற்றி

காலம் கருதி செயல்பட்டாலே வெற்றிக்கனியை குறைந்த முயற்சியில் சுவைத்திடலாம்.

என்னதான் திட்டமும் முயற்சியும் சிறப்புடையதாய் அமைந்தாலும் அவைகளின் பலனும் முயற்சியின் கால அளவும் செய்யப்படுகின்ற செயல் நிகழும் காலத்தை பொறுத்தது.

கொக்கு தன் இரை தன்னருகில் வரும் வரை பொறுமையாக தன் இரை தன்னருகில் வரும் வரை பொறுமையாக காத்திருந்து தக்க சமயம் பார்த்து அதை கொத்தி உண்பது போல் உரிய காலம் வரை காத்திருந்து செயல்பட்டால் வெற்றி பெறுவது உறுதி.

 

-- இது நான் கல்லூரி படிக்கும் காலத்தில் (1997) எழுதிய கட்டுரை. இதை பேஸ்புக்கில் 2010ல் பதிந்தேன். இங்கு எல்லோருடைய பார்வைக்கும் வைக்கிறேன்.

Thursday, April 25, 2013

வாழ்க்கையின் அர்த்தம் - வாழ்க்கை பற்றிய எனது பார்வை

ஒரு மனிதன் மற்றொரு மனிதனைப் பற்றி அறிந்து கொள்ள நூறாண்டுகள் தேவையில்லை. அவர்கள் இருவருமே ஒரு மணிநேரம் பேசினாலே போதும்.

ஒருவருக்கு பிடித்தவை, பிடிக்காதவை, ரசிக்கும் நினைவுகள், வருத்தப் பெட்டகங்கள் இவைகளை மற்றவருடன் பங்கிட்டு கொண்டல் என்பது தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படி தெரியப் படுத்திக்கொள்வதால் மற்றவர் நம்முடைய விருப்பத்திற்கு இணங்கவும் நாம் அவரின் விருப்பப்படி நடக்கவும் முடியும்.

எனக்கு பிடித்த ஒன்று உனக்கு பிடிக்காவிட்டால் அதை நான் இரு வழிகளில் செயல் படுத்திக்கொள்ள இயலும்.

* முதலாவது - உனக்கு தெரியாமல் அச்செயலை செய்வது.

* இரண்டாவது - நான் செய்வதை நீ சகித்துக் கொள்வது. ஆனால் இது உன்னுடைய சகிப்புத்தன்மையை பொறுத்தது.

வேறு ஒன்று உள்ளது. அதுதான் உனக்கு பிடிக்காத செயலை நான் அறவே செய்யாது விடுவது.

இது அந்த செயலின் மீது இருக்கும் எனது ஈடுபாட்டையும் உன் மீது இருக்கும் பிரியத்தின் அளவையும் பொறுத்தது.

நான் உன்னைவிட அந்த செயலில் அதிக ஆர்வமும் பிரியமும் உடையவனாய் இருந்தால் நான் உன் மனம் நொந்தாலும் அச்செயலை விடமாட்டேன். பலர் சிகரெட் பிடிப்பது இந்த வகையைச் சேர்ந்தது. அச்செயலைவிட நீ முக்கியம் உன் மனமறிந்து நான் செயல்படுவது முக்கியம் என்றால் நான் அச்செயலை தியாகம் செய்து விடுவேன்.

நேசம் என்பதும் காதல் என்பது ஒருவரின் குணத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளும் களமாக அமைத்துக் கொள்ளவேண்டும். காதல் என்பதை தங்கள் நடிப்பு பழகும் இடமாக கருதுகின்றனர். மணம் செய்து கொண்டு புரிந்து கொள்ள முயல்வதைவிட புரிந்து கொண்டவர்கள் மணம் செய்தால் அவரிகளின் வாழ்க்கை மணம் வீசி திகழும்.

நம்பிக்கை என்பது வாழ்க்கையின் அச்சாணி. நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். “உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?” உங்கள் மீது நீங்கள் கொள்ளும் நம்பிக்கையின் அளவை கொண்டே நீங்கள் மற்றவர்களையும் மதிபீடு செய்கிறீர்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.

எவன் ஒருவன் மற்றவர்மீது சந்தேகம் கொள்கிறானோ அவன் தன் மீதே நம்பிக்கை இல்லாதவன் ஆகிறான் - இது திருமண வாழ்வில் மிகவும் கடினமான ஆனால் மிக முக்கியமான பாடம். இதையே சற்று விளக்கமாக கூறவேண்டுமானால் -

”ஒருவன் நல்லவன். சுத்தமானவன். உத்தமமானவன். நான் மற்ற பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதவன் என்றால் பலர் அவன் மனைவியை பிறர் பார்க்கும்போது அவனுக்கு சந்தேகம் வராது. அவன் பார்க்கும் பார்வை கோணலாக இருந்தால் மற்றவரின் நேர்கொண்ட பார்வையும் கோணலாகத்தான் தெரியும்.”

உலகின் ஒவ்வொரு செயலும் நிகழ்வும் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கின்றன. அதனால் நம் மனம் பக்குவப்படவோ.. சஞ்சலப்படவோ ஆரம்ப்பிக்கிறது. அதே போன்ற செயல்கள் எதேச்சையாக நடந்தாலும் அதற்கு நாமாக காரணம் கற்பிக்கின்றோம் மேலும் அதற்கு எடுத்துக்காட்டாக நடந்த செயல்களை நினைவு கூறுவோம்.

“நீ மேலே நின்று பார் - உலகம் முழுதும் உனக்கு தெரியும்.

நீ கீழே இருந்து பார் - உலகமே உன்னை பார்க்கும்”

உன்னை உலகில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள - புரிந்து கொள்ள - நேசிக்க சொல்லவில்லை. உன் குடும்பத்தை நேசித்துப் பார். பெற்றோர் பெண்டு பிள்ளை இவர்களை புரிந்து கொள். அவர்தம் நிலையை - மனதை புரிந்து கொள். அவர்களும் உன்னை புரிந்து கொள்வர். பிறகு பாரேன் உன்னையன்றி யாரும் மகிழ்ச்சியான மனிதனாய் இருக்க முடியாது.

 

-- இது நான் கல்லூரி படிக்கும் காலத்தில் (1997) எழுதிய கட்டுரை. இதை பேஸ்புக்கில் 2010ல் பதிந்தேன். இங்கு எல்லோருடைய பார்வைக்கும் வைக்கிறேன்.